புதுடெல்லி,
இலங்கை அதிபர் வருகையை கண்டித்து டெல்லியில் மதிமுக கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.
தனது இந்திய பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கோத்தபய ராஜபக்சே முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட மதிமுகவினர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.